கோவை மாவட்டம் கொள்ளையடிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர்...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த 07.10.2022 -ஆம் தேதி வயதான மூதாட்டியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அம்மூதாட்டியின் கை மற்றும் கால்களை கட்டி போட்டு, வீட்டில் இருந்த 9 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன்,IPS, அவர்கள் உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திரு.தாமோதரன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சசிகுமார், தலைமை காவலர் மகேந்திரன் மற்றும் காவலர் சதீஷ்குமார் ஆகியோர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன தணிக்கை செய்தும், சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளான சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் செல்வராஜ் (39)மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது மகன் பிரபாகரன் (34)ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து,
அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் கொள்ளையடித்த மற்றும் பூட்டி இருந்த வீடுகளில் திருடிய 6 வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி இரண்டு நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்..
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளையும் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள் .
நிருபர்.P.நடராஜ்
Comments
Post a Comment