தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலைபொருட்கள் கள்ளலாட்ரி விற்பனையை தடுக்க கடும்நடவடிக்கை எடுக்கபடும் SP.Dr.L.பாலாஜிசரவணன் அறிவிப்பு.


தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை, லாட்டரி மற்றும் சட்ட விரோதமான மதுபான விற்பனையை முற்றிலும் ஒழிக்க 8 தனிப்படைகள் அமைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தீவிர நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை, லாட்டரி மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்களின் நேரடி கண்காணிப்பில்  தூத்துக்குடி அனைத்து உட்கோட்டத்திற்கும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ள மேற்படி தனிப்படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு கஞ்சா, புகையிலை, லாட்டரி மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு மேற்படி தனிப்படையினர் மூலம் மேற்படி குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பகுதி காவல் நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 61 வழக்குகள் பதிவு செய்து, 93 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபாய் 6,70,000/- மதிப்புள்ள 67 கிலோ கஞ்சா, ரொக்கப்பணம் 1,30,000/- மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரிகள் பயன்படுத்திய 3 கார்கள் மற்றும் 16 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த ஆண்டு இதுவரை புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 718 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபாய் 50,19,000/- மதிப்புள்ள 7,050 கிலோ புகையிலைப் பொருட்கள், விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரிகள் பயன்படுத்திய 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 1916 பேர் கைது செய்து, 1913 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபாய் 21,39,000/- மதிப்புள்ள 3849 லிட்டர் அளவுள்ள மதுபானங்கள் அடங்கிய மதுபாட்டில்கள், 139 லிட்டர் கள், ரொக்கப்பணம் ரூபாய் 1,06,000/- மற்றும் 16 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட மொத்தம் 84 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 30 நாட்களில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற  போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை, ரவுடியிஸம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிருபர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.